குமரி மாவட்டத்தில் 80 சதவீதம் பேருக்கு மழை வெள்ள நிவாரணம் வினியோகம்: விடுபட்டவர்களுக்கு நாளை முதல் வழங்கப்படும்

 

நாகர்கோவில், ஜன.1: குமரி மாவட்டத்தில் இதுவரை 80 சதவீதம் பேருக்கு மழை வெள்ள நிவாரணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குமரி மாவட்டத்தில் கடந்த மாதம் 17, 18 தேதிகளில் அதிக கனமழைபெய்தது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டன. குமரி மாவட்டத்தில் மழை வெள்ள நிவாரணமாக ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் நிவாரணம் வழங்க முதல் கட்டமாக டோக்கன் விநியோகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து டிசம்பர் 29ம் தேதி முதல் மழை வெள்ள நிவாரணம் ரேஷன்கடைகளில் வழங்கப்பட்டது. நேற்று ஞாயிறு விடுமுறை நாளிலும் ரேஷன் கடைகள் திறந்து மழை வெள்ள நிவாரண தொகை விநியோகம் நடைபெற்றது. குமரி மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 77 ஆயிரத்து 803 ரேஷன்கார்டுதாரர்களுக்கு நிவாரணம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 80 சதவீதம் பேருக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் விடுபட்டவர்களுக்கு நாளை (2ம் தேதி) முதல் மீண்டும் விநியோகம் செய்யப்படும். ஜனவரி 4ம் தேதி வரை ரேஷன் கடைகளில் மழை வெள்ள நிவாரணம் வழங்கப்படும் எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்