குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி பணிகள் தொடக்கம்: குளங்களில் தண்ணீர் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் குளத்து பாசன பகுதிகளில் கன்னிப்பூ சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளன. குமரி மாவட்டத்தில் விளை நிலங்கள் சுருங்கி போனதன் விளைவாக தற்போது சுமார் 7000 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி பணிகள் நடக்கின்றன. கன்னிப்பூ மற்றும் கும்பபூ ஆகிய இருபோக சாகுபடிகள் நடக்கின்றன. இதில் கன்னிப்பூ  சாகுபடி பணிகள் ஜூன் மாதம் முழு அளவில் தொடங்கும். இதற்காக பேச்சிப்பாறை அணை ஜூன் மாதம் திறக்கப்படும்.கால்வாய் பாசனம் தவிர, குளத்து பாசன பகுதிகளில் சித்திரை 10ல் விதைப்பு பணிகள் தொடங்கும். ஏற்கனவே கடந்த ஆண்டு பெய்த மழையால் தற்போது குளங்களில் தண்ணீர் உள்ளது. கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக மழை பெய்தும் வருகிறது. அணைகளிலும் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. எனவே இந்த முறை கன்னிப்பூ சாகுபடிக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஜூன் மாத 2 வது வாரத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கும் என்பதால், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை இருக்கும். எனவே அணைகளுக்கும் தண்ணீர் வரத்து வந்து விடும். இதை கருத்தில் கொண்டு தற்போது குளத்து பாசன பகுதிகளில்  சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளன. சுசீந்திரம், தெங்கம்புதூர், காக்கமூர், பறக்கை உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளன. கடந்த வருடம் வடக்கிழக்கு பருவமழை பெய்து பலத்த சேதம் அடைந்ததால், கும்பபூ சாகுபடி பணிகள் தாமதமாக தொடங்கியது. வருடம் தோறும் கும்பபூ அறுவடை பணிகள் மார்ச் மாதம் முடிந்துவிடும். ஆனால் கடந்த வருடம் கும்பபூ சாகுபடி பணிகள் தாமதமாக தொடங்கியதால், பல பகுதிகளில் அறுவடை தாமதமாக தான் நடந்தது. கோடை காலத்தில் கடைவரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் பாசன கால்வாய்கள் தூர்வாரப்படும். தற்போது பொதுப்பணித்துறை சார்பில் தூர்வாரும் பணிகள் தொடங்கி உள்ளன. அக்னி நட்சத்திரம் 4ம் தேதி தொடங்குகிறது. கோடையில் தூர்வாரும் பணியை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும். மேலும் கடந்த ஆண்டு மழையால் சேதம் அடைந்த கால்வாய் பகுதிகளையும் முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

ரயில் ஓட்டுநர் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் திமுக எம்பி வலியுறுத்தல்

காவேரி மருத்துவமனை, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்