குடும்ப சண்டையை தடுக்க முயன்ற இன்ஸ்பெக்டர், ஏட்டு மீது தாக்குதல்: உதவி பேராசிரியையின் கணவன் மீது வழக்கு

பெரம்பூர்: கொளத்தூர் ஜி.கே.எம் காலனி 37வது தெருவை சேர்ந்தவர் பூர்ணிமா (34). ராஜிவ்காந்தி சாலையில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் அருண்ராஜ், நேற்று முன்தினம் இரவு போதையில் வீட்டிற்கு வந்து, மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், சமையல் அறையில் இருந்த குக்கரை எடுத்து பூர்ணிமா தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் அவரது மண்டை உடைந்து, ரத்தம் வழிந்தோடியது. உடனே இதுபற்றி பூர்ணிமா கொளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில், தலைமை காவலர் திலகவதி சம்பவ இடத்திற்கு வந்து, அருண்ராஜை கண்டித்துள்ளார். அப்போது அவர், தலைமை காவலரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், தாக்கியுள்ளார். இதுபற்றி கொளத்தூர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் அஜ்குமாரிடம் திலகவதி தெரிவித்துள்ளார். அதன்பேரில், அங்கு வந்த இன்ஸ்பெக்டர் அஜ்குமார், அருண் ராஜை காவல் நிலையம் வருமாறு அழைத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அருண்ராஜ், இன்ஸ்பெக்டர் சட்டையை பிடித்து தாக்கி, கீழே தள்ளி உள்ளார். இதில், அவரது சட்டை கிழிந்தது. இதுதொடர்பாக, கொளத்தூர் உதவி கமிஷனர் சகாதேவன் நேரில் விசாரணை நடத்தினார். அப்போது, அருண்ராஜ் மனைவி பூர்ணிமா, தலைமை காவலர் திலகவதி, இன்ஸ்பெக்டர் அஜ்குமார் ஆகியோர் அவரிடம் புகார் அளித்தனர்.அப்போது அருண்ராஜ், ‘‘நான் ஒரு வழக்கறிஞர். உங்களால் என்னை எதுவும் செய்ய முடியாது. இப்போது ஐஜிக்கு போன் போடட்டுமா,’’ என்று போலீசாரை மிரட்டியுள்ளார். இதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அருண்ராஜ் உண்மையிலேயே வழக்கறிஞர் தானா அல்லது போலி வாழ்க்கறிஞரா என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த அருண்ராஜ் மீது 2020ம் ஆண்டு ஐசிஎப் காவல் நிலையத்தில் போலீசாரை பீர் பாட்டிலால் தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் ஏற்கனவே சிறைக்கு சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது….

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்