சென்னை: அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பினை பொது பயன்பாட்டிற்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை நேற்று வெளியிட்ட அரசாணை: 2022ம் ஆண்டு தமிழர்த் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு, தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட்டது போக கையிருப்பில் உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பினை பொருட்களின் தரத்தினை உறுதி செய்த பின்னர், அந்தந்த மாவட்ட ஆட்சியர், துணை ஆணையாளர் தெற்கு, வடக்கு ஆகியோரிடம் ஒப்படைத்து தீர்வு செய்யலாம் என அரசு முடிவு செய்து ஆணையிடுகிறது. அதன்படி, மாவட்ட ஆட்சித்தலைவர்கள்/துணை ஆணையாளர்(நகரம்) வடக்கு/தெற்கு அவர்களின் விருப்புரிமை அடிப்படையில் பொதுநல அரசு சார்/ அரசு சாரா அமைப்புகளில் தங்கி பயன்பெற்று வரும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பயனாளிகள், தொழிநோயாளிகளுக்கான காப்பகங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்கள், அரசு மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்கள், ஊரக குடிசைப் பகுதிகளில் உள்ள நோய்வாய்ப்பட்ட குறிப்பாக கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள/குணமடைந்த மக்களின் குடும்பங்கள், அம்மா உணவகம்/சமுதாய சமயற்கூடங்கள் மற்றும் இன்னும் பிற பொது பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்திக்கொள்ளல்லாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….