கரூர், நவ. 30: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளான தாந்தோணிமலை, ராயனூர், இனாம்கரூர், வேலுசாமிபுரம், இனாம்கரூர், பெரியகுளத்துப்பாளையம், பசுபதிபாளையம், சணப்பிரட்டி போன்ற பகுதிகள் புறநகர் பகுதிகளாகும். இந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இதில், புறநகர்ப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் உள்ள காலியிடங்கள், தனியார் நிலங்கள் அனைத்திலும் சீத்த முட்செடிகளின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளன.
காடு போல வளர்ந்துள்ள இந்த சீத்த முட்செடிகளின் உட்புறம் விஷ ஐந்துகளின் நடமாட்டம் உள்ளது. இதுமட்டுமின்றி, சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகளையும் இந்த சீத்த முட்செடிகளால் ஏற்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இதனை அகற்ற வேண்டும் என நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், மாநகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் சீத்த செடிகள் அதிகளவு வளர்ந்து மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
குடியிருப்புகள் மட்டுமின்றி, ஆற்றின் போக்கை மாற்றும் அளவுக்கு அமராவதி ஆற்றில் அதிகளவு செடி கொடிகள் வளர்ந்துள்ளன. இதனையும் அகற்ற வேண்டும் எனவும் பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் குடியிருப்பு பகுதிகள் மற்றும் அமராவதி ஆறு போன்ற பகுதிகளில் பரவலாக ஆக்ரமித்துள்ள இந்த சீத்த முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.