புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள கூத்தாடிவயல் நரிக்குறவர் குடியிருப்பை சேர்ந்த நரிக்குறவர்கள் தங்களுக்கு அரசு, குடியிருப்பு கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மனுவில், கூத்தாடிவயலில் கடந்த 1972ல் எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில் எங்களுக்கு 250 வீடுகள் கட்டித்தரப்பட்டன. தற்போது, அந்த குடியிருப்பு முழுமையாக பழுதடைந்து வசிப்பதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இப்போது எங்களின் குடும்பங்களின் எண்ணிக்கையும் 500ஆக உயர்ந்துள்ளது. எனவே, பழுதடைந்த வீடுகளை இடித்துவிட்டு, முழுமையாக அனைவருக்கும் அரசு, குடியிருப்பு கட்டி தர வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.