குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை, செப்.7: திருத்தணி அடுத்த தாழவேடு காலனியை சேர்ந்தவர் பிரேம்குமார் (32). அவரது மனைவி மஞ்சுளா (30). தம்பதிக்கு மிதுலன் (2), கபிலன் (1) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள், திருத்தணி முருகப்பா நகரில் உள்ள மகேந்திரன் என்பவரின் அடுக்குமாடி வீட்டின் மேல் தளத்தில் வாடகைக்கு வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த பைக்குகள் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்ததால், வீட்டை கரும் புகை சூழ்ந்தது. இதனால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பிரேம்குமார் அவரது மனைவி குழந்தைகளுடன் தப்பிக்க படிக்கட்டு வழியாக கீழே இறங்கி வந்த போது 4 பேரும் தீயில் சிக்கினர்.

அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபிலன், மிதுலன் ஆகிய 2 குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி இறந்தன. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஞ்சுளா, பிரேம்குமார் 80 சதவீத காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வீட்டின் உரிமையாளர் மகேந்திரன், அவரது குடும்பத்தினர் தீ விபத்து நடைபெற்ற போது வீட்டை விட்டு வெளியில் வராமல் அறையில் இருந்ததால் உயிர் தப்பினர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி