தேனி, ஜன. 13: தேனி மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாடுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், குடியரசு தினவிழா கொண்டாடுவது குறித்தும், விழா தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், குடியரசு தினவிழாவிற்கான அழைப்பிதழ் அச்சிடுதல், விழா மேடை மற்றும் பந்தல் அமைத்தல், விழா நடைபெறும் மைதானத்தை தயார்படுத்துதல்,
விழாவிற்கு வருகை தருகின்ற சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு மரியாதை செலுத்துதல், காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை சார்பில் அணி வகுப்பு மரியாதை செலுத்துதல், சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்குதல், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முறையாக மேற்கொண்டு, குடியரசு தின விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடிட அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
மேலும், குடியரசு தினவிழாவினை கண்டு களித்திட வருகை தரும், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி, சுகாதார வசதி, பாதுகாப்பு வசதி உள்ளிட்டவைகளை செய்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீண் உமேஷ் டோங்கரே, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிந்து, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் பன்னீர் செல்வம்,தேனி மாவட்ட ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் அண்ணாதுரை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் இந்துமதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சசிகலா உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.