தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே, பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவதானப்பட்டி அருகே, பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள இந்திரா காலனி உள்ளது. இங்கு பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் தண்ணீரை ஏற்றி, பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். இந்நிலையில், தொட்டியில் விரிசல் ஏற்பட்டு பழுதடைந்துள்ளது. அடிக்கடி விரிசல்களை சீரமைத்து, தண்ணீரை மேலேற்றி, குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர். இந்த தொட்டியை சீரமைக்கக்கோரி, கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் கோரிக்கை விடுத்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகள் கண்டுகொள்ளவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். இதனால், தொட்டி அருகே குடியிருக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். எனவே, குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு, புதிய குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். …