செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரை சேர்ந்தவர் மனோகரன் (55). கொத்தனார். இவர் தனது மனைவி மற்றும் மகன்களோடு காட்டாங்கொளத்தூர் பகுதியில் வசித்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மனோகரன், சிங்கப்பெருமாள் கோயில் அருகே கரும்பூர் பகுதியில் வேலைக்கு சென்றார். அப்போது, அங்கு சித்தாள் வேலை செய்யும் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. பின்னர், கள்ளக்காதலாக மாறியது. இதனால் மனோகரன், தனது குடும்பத்தை உதறி தள்ளிவிட்டு, கள்ளக்காதலி மற்றும் அவரது மகன் தினேஷ் (24). கூலி தொழிலாளி, ஆகியோருடன் கரும்பூர் கிராமம் ரோஜா தோட்டம் மெயின் ரோட்டில் வசித்தார்.கள்ளக்காதலியின் மகன், தினேஷுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால், மனோகரனுக்கும், தினேஷுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், தினேஷ் அடிக்கடி குடிப்பதற்கு மனோகரனிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். இதையொட்டி இருவருக்கும் இடையே பிரச்னை முற்றியது. இந்நிலையில், நேற்று முன்தினம் தினேஷ், போதையில் வீட்டுக்கு சென்றார். இதை பார்த்த மனோகரன், தினமும் குடித்து விட்டு வருகிறாயா என கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், அருகில் இருந்த சவுக்கு கட்டையை எடுத்து, மனோகரனை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அங்கு படுகாயமடைந்த மனோகரனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோகரன் பரிதாபமாக இறந்தார். புகாரின்படி மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் முத்துசாமி, எஸ்ஐ வெங்கடேசன் கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த தினேஷை, நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….