பட்ஜெட் மீதான விவாதத்தில் பாஜ எம்எல்ஏ அப்பச்சு ரஞ்சன் பேசியதாவது: “குடகு மாவட்டத்தில் மழை வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்பட்டாலும் தென்னிந்தியாவுக்கு காவிரி நீர் கிடைக்கிறது. அதே நேரம் குடகு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. முதல்வர் எடியூரப்பா குடகு மாவட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி மக்களுக்கு பயன் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். யானை, புலி உள்ளிட்ட வன விலங்குகளால் தொழிலாளர்கள், தோட்டப்பயிர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுகிறோம். காபி தோட்டங்களில் மார்ச், ஏப்ரல் மாதத்தில் பூக்கள் ஏற்படும். அப்போது புழுக்களின் பிரச்னையில் இருந்து தப்பிப்பதற்காக மின்சார விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, இந்நேரத்தில் கூடுதல் மின்சாரம் வழங்கினால் அது காபி உற்பத்திற்கு பயன்படும் என்பதால் இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். இதுதவிர குடகு மாவட்டத்தில் தேக்கு, தைல மரங்கள் அதிகம் உள்ளன. இம்மரங்களால் பறவைகளுக்கு மட்டும் இன்றி வன விலங்குகளுக்கும் பயன் கிடையாது. எனவே, வனப்பகுதியில் அரசு, ஆலமரம், மா போன்ற கனி வகை மரங்கள் நடுவதற்கும் இடையே சிறிய நீர் குட்டை அமைப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பறவைகள் கூடுகள் கட்டி மரங்களில் இருந்து கிடைக்கும் கனிகளை உணவாக கொண்டு உயிர் வாழும். அதே போல் வன விலங்குகளும் பசுந்தழை கிடைக்கும் என்பதால் அவை ஊருக்குள் நுழைவதற்கு முயற்சி மேற்கொள்ளாது. மழைக்காலம் தொடங்கி விட்டதா? என எங்களிடம் (குடகு)தான் அனைவரும் கேட்பது வழக்கமாகும். ஒவ்வொரு மழைக்காலத்திலும் சில இடங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. வீடுகள் இடிந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்திற்கு முதல்வர் எடியூரப்பா கூடுதல் நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’, என்றார். …