வேடசந்தூர், ஜூலை 8: வேடசந்தூர் அருகே அழகாபுரி குடனாறு அணையின் நீரை திறக்க நேற்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு குடகனாறு பாதுகாப்பு சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நேற்று வேடசந்தூர் தாசில்தார் விஜயலட்சுமி, சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தாசில்தார், ‘பழைய 5 ஷட்டர்களை புதுப்பிக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான தளவாடங்கள் வந்துள்ளது.
ஷட்டர்கள் பழுது பார்த்தவுடன் அணையில் முழுமையாக தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அணையில் உள்ள தண்ணீர் வலது, இடது வாய்க்காலில் திறந்து விடப்படும்’ என்றார். பின்னர் பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்பட்டு மதியம் வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் அணை செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி செயற்பொறியாளர் தனசேகர், உதவி பொறியாளர் முருகன், சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் பொம்முராஜ், செயற்குழு உறுப்பினர் குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.