கீழ்வேளூர், ஜூன் 25: கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் உற்சவம். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் சுந்தரகுஜாம்பிகை உடனுறை அட்சயலிங்க சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆனி மகத்தையொட்டி அட்சயலிங்க சுவாமிக்கும், சுந்தரகுஜாம்பிகையம்மனுக்கும் நேற்று இரவு திருக்கல்யாண விழா நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பெண்கள் பழங்கள், இனிப்பு வகைகள், மஞ்சள், குங்குமம், தாலி கயிறு போன்றவற்றை சீர்வரிசையாக எடுத்து வந்தனர். அதன் பின்னர் மாப்பிளை அழைப்பு, பெண் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து அட்சயலிங்க சுவாமிக்கும், சுந்தர குஜாம்பிகையம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.