ஈரோடு, மே 30: கீழ்பவானி வாய்க்காலில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ள இடையூறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் தெரிவிக்க பட்டுள்ளது. சென்னிமலை பாசனப் பிரிவு, நீர்வளத் துறை உதவிப் பொறியாளர், சென்னிமலை போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: அரசு உத்தரவின்படி, கீழ்பவானி வாய்க்காலில் விரிவாக்குதல், புதுப்பித்தல் உள்ளிட்ட மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள உள்ள கீழ்பவானி வாய்க்கால் மைல் 84/0-1ல் (குன்னாங்காட்டு வலசு பகுதியில்) நேற்று முன்தினம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
மாலை சுமார் 4.30 மணியளவில் அங்கு வந்த அப்பகுதி விவசாயிகள் சுமார் 9 பேர் பணிகளை மேற்கொள்ள விடாமல் இடையூறு செய்து தடுத்து நிறுத்தினர். எனவே, அரசு உத்தரவின்படி பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில், சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.