சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழப்பெரும்பள்ளத்தில் பழமைவாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் முயற்சியில் இக்கோயில் திருப்பணிகள் நடந்தது. இதைதொடர்ந்து கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 2ம் தேதி பூர்வாங்க பூஜைகள், முதல்கால யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை வலம் வந்து ராஜகோபுரம், அம்பாள், பரிவார மூர்த்திகளின் விமானங்களை அடைந்தது. பின்னர் துர்கா ஸ்டாலின் கொடியசைக்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கியவாறு விமான கலசங்களில் புனிதநீரை ஊற்றினர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கும்பாபிஷேக விழாவில் தமிழக முதல்வரின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்தி, நடிகர் சந்திரசேகர், அமைச்சர் மெய்யநாதன், எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ஒன்றியக்குழு தலைவர்கள் நந்தினி ஸ்ரீதர், கமலஜோதி தேவேந்திரன், ஜெயபிரகாஷ், செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அப்துல் மாலிக் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேக விழாவையொட்டி மயிலாடுதுறை கலெக்டர் லலிதா முன்னிலையில் எஸ்பி நிஷா தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்….