கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் வரை கோயம்பேட்டில் இருந்து பஸ்களை இயக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது: ஐகோர்ட் மறுப்பு

சென்னை, ஜூலை 10: கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் வரை அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க கோரிய வழக்கில், அவ்வாறு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னை மாநகரின் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 2023ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி தொடங்கப்பட்டது. பேருந்து நிலையம் அமைக்கும் போது, பயணிகள் சுலபமாக அணுக ஏதுவாக விமான நிலையம் – கிளாம்பாக்கம், வேளச்சேரி – தாம்பரம் மெட்ரோ ரயில் இணைப்பு ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. இந்த நிலையில், மெட்ரோ ரயில் துவங்கும் வரை, கோயம்பேட்டில் இருந்து முன்பு போல அரசு மற்றும் ஆம்னி பஸ்களை இயக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராம்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு, விமான நிலையம் – கிளாம்பாக்கம், வேளச்சேரி – தாம்பரம் மெட்ரோ ரயில் சேவை துவங்கும் வரையும், புதியதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்ல ஆகாய நடைபாதை மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பெருங்களத்தூர் மார்க்கம் செல்லும் வாகனங்களுக்கு ‘யு’ வளைவு பாலம் அமைக்கும் வரையில், அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கவும், இலகு மற்றும் கனரக வணிக வாகனங்களை சென்னை அவுட்டர் ரிங் ரோடு வழியாக இயக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்த வழக்குகள் தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் தன்னையும் இணைக்க கோரி மனுதாரர் மனு தாக்கல் செய்துள்ளார் என்று தெரிவித்தார். இதையடுத்து, தனி நீதிபதி முன் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. வழக்கை வாபஸ் பெற்று, தனி நீதிபதி முன் வழக்கை நடத்தும்படி மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

Related posts

பொது இடத்தில் சண்டையிட்ட 3 பேர் கைது

ம.ரெட்டியபட்டியில் திமுக ஆலோசனை கூட்டம்

ஏகேடி.தர்மராஜா கல்லூரியில் நுகர்வோர் மன்றம் துவக்க விழா