திங்கள்சந்தை : டிசம்பர் மாதம் என்றாலே பண்டிகை காலம் தான். டிசம்பர் மாதத்தை பண்டிகை மாதம் என கூறுவதும் உண்டு. கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் பஜனை பட்டாபிஷேகம், கார்த்திகை தீப திருவிழா என கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதேபோன்று டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்து பிறப்பை நினைவு கூறும் வகையில் கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும் வகையில் தேவாலயங்கள் மற்றும் வீடுகளில் நாணல் புற்களால் குடில்கள் அமைத்து மாதா, சூசையப்பர், 3 அரசர்கள் மற்றும் ஆடு, பசு, கன்றுகளின் சிலைகள் வைத்து குடில்கள் தயார் செய்கின்றனர். பின்னர் 24ம் தேதி இரவு 12 மணிக்கு இயேசு பாலன் பிறப்பை நினைவு கூறும் வகையில் இயேசு பாலன் சொரூபத்தை வைத்து வழிபடுகின்றனர். இயற்கை சூழ்ந்த குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் குடில் கட்ட நாணல் புற்களை இளைஞர்கள் தலை சுமடிலும், சைக்கிளிலும் அறுத்து கொண்டு வந்த காலம் உண்டு. தற்போதைய அவசர உலகில் அதுபோன்ற வழக்கங்கள் குறைந்து விட்டன. அதுபோன்று அனுபவம் இல்லாத இளைஞர்கள் மலைப்பகுதிகளுக்கு சென்று நாணல் அறுப்பது என்பதும் இயலாத காரியம். இதை ஒரு சில விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் சாதகமாக்கி காசாக்கி வருகின்றனர். மலைப்பகுதிகளுக்கு சென்று நாணல் புற்களை அறுத்து கட்டுகளாக கட்டி விலைக்கு விற்பது வழக்கமாகி விட்டது. கிறிஸ்துமஸ் விழா நெருங்கி வருவதால் சுங்கான்கடை தேசிய நெடுஞ்சாலையில் தற்போது நாணல் புற்கள் விற்பனை ஜரூராக நடந்து வருகிறது. அருகில் உள்ள பொற்றை மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து அறுத்து கொண்டு வந்து விற்கப்படும் இந்த நாணல்களை அவ்வழியாக வருவோர் போவோர் கார், பைக்களை சாலையோரம் நிறுத்தி வாங்கி செல்கின்றனர். இவை கட்டு ₹. 100 முதல் விற்பனை செய்யப்படுகிறது….