கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க வாய்ப்பு

தர்மபுரி, ஏப்.7: தர்மபுரி மாவட்டத்தில், கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல், புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள அரசு நிதிஉதவி வழங்குகிறது. நிதி உதவி பெற விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சொந்தக்கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-2017ம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், கூடுதல் பணி மேற்கொள்ளவும் கட்டடத்தின் தன்மைக்கேற்ப மானிய தொகை உயர்த்தியும் அரசு ஆணையிடப்பட்டுள்ளது. கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள பணிகள் விவரம்: தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீர் வசதிகள் உருவாக்குவதற்கு வழங்கப்படுகிறது.

தேவாலய கட்டிடத்தின் வயதிற்கேற்ப உயர்த்தப்பட்டுள்ள மானிய தொகை விவரம் 10-15 வருடம் வரை இருப்பின் ₹1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 15 முதல் 20 வருடம் வரை இருப்பின் ₹2 லட்சத்திலிருந்து 4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 20வருடங்களுக்கு மேலிருப்பின் ₹3 லட்சத்திலிருந்து ₹6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து கிறிஸ்துவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக்கணக்கில் மின்னனு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். இதற்கான விண்ணப்பப்படிவம் https://bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை படியிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related posts

சுற்றுலா சார்ந்த தொழில் முனைவோர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சதுரகிரி கோயிலுக்கு நேரம் கடந்து வந்த பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

எம்.புதுப்பட்டியை தலைமையிடமாக கொண்டு தனித் தாலுகா உருவாக்க கோரிக்கை