கோவை, ஜூன் 19: கோவை துடியலூர் முத்துநகரை சேர்ந்தவர் பூபாலன். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுவிட்டார். அப்போது அங்கே வந்த வாலிபர் இவரது வீட்டு முன்பு இருந்த தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை கீழே இறங்கி வருமாறு சத்தம் போட்டனர். இதில் அந்த நபர் நிலைதடுமாறி சுமார் 10 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலை, கை, கால்களில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த நபருக்கு சுமார் 45 வயது இருக்கும் என தெரிகிறது. இவரை பற்றிய மற்ற விவரங்கள் தெரியவில்லை. துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.