ஈரோடு, அக்.14: ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருங்கதொழுவு வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் சூர்யா (28). இவர், கோவையில் கிரேன் டிரைவராக பணியாற்றி வந்தார். சூர்யாவுக்கு திருமணமாகி, கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்காக சூர்யாவின் மனைவி அவரது அம்மா வீடான துரையூருக்கு சென்றார். கடந்த ஒரு வாரமாக சூர்யா அவரது பெற்றோருடனும், மனைவியுடனும் பேசாமல் இருந்து வந்தார். இந்நிலையில், சூர்யா நேற்று முன்தினம் வீட்டில் விஷ மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் சூர்யாவை மீட்டு சென்னிமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சென்னிமலை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து, சூர்யாவின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.