கிருஷ்ணகிரி, செப்.7: கிருஷ்ணஜெயந்தி விழாவை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கிருஷ்ண பகவான் அவதரித்த நாள், கிருஷ்ண ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, கிருஷ்ணகிரி பழையபேட்டை கிருஷ்ணர் கோயில், லட்சுமி நாராயணசாமி கோயில், தர்மராஜா கோயில்களில் கிருஷ்ணருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து உற்சவர், பழையபேட்டை, நரசிம்மசாமி கோயில் தெரு, நேதாஜி சாலை, மகாராஜகடை சாலை வழியாக தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை வேணுகோபால் சாமி கோயிலில், கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்தனர். பஜனையை தொடர்ந்து கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்த குழந்தைகள், பூந்தோட்டம் முத்துமாரியம்மன் கோயில் வரை ஊர்வலமாக சென்றனர். இதேபோல, வீடுகளிலும் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. வீடுகளில் கிருஷ்ணருக்கு சீடை, முறுக்கு, வெண்ணெய் படைத்து வழிபட்டனர். மேலும் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு பெற்றோர் மகிழ்ந்தனர்.