கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்திருந்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி கடைகள் பகல் 12 மணி வரை திறந்திருக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மளிகை மற்றும் காய்கறி கடைகள் நீங்கலாக பிற கடைகள் பகலில் திறந்து வைக்கப்பட்டிருப்பதாகவும், சமூக இடைவெளியை அவர்கள் கடைபிடிக்கவில்லை என அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் தலைமையில அலுவலர்கள் நேற்று காலை ஆய்வு செய்தனர்.அவர்கள் விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்திருந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும், கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல், கிருஷ்ணகிரி டவுன் மற்றும் பெரியமுத்தூர் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு தொடரும் என்றும், தொடர்ந்து விதிமுறைகளை மீறியும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் கடைகள் திறந்து வைத்திருந்தால் அபராத தொகை அதிகமாக வசூலிக்கப்படும் என்றும், கடை மூடி சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.வேப்பனஹள்ளி: வேப்பனஹள்ளியில் நேற்று காலை வேளாண்மை துணை இயக்குனர் வானதி தலைமையில் பறக்கும்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுனர். அப்போது காந்தி சிலை அருகே விதி மீறி திறந்திருந்த பெயிண்ட் கடை, குப்பம் ரோடு சந்திப்பில் உள்ள பேக்கரி கடை ஆகியவற்றிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து விதி மீறி திறந்திருந்த மற்ற கடைக்காரர்களும் அவசரம் அவசரமாக கடைகளை மூடிவிட்டு ஓட்டம் பிடித்தனர். எச்சரிக்கைகளை மீறி திறக்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்….