கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,136 குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி, ஜூன் 20: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 6 மாதம் முதல் 6 வயதுக்குட்பட்ட 1,136 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் வழங்கப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, மத்தூர், பர்கூர், காவேரிப்பட்டணம், வேப்பனஹள்ளி, சூளகிரி, கெலமங்கலம், ஓசூர் மற்றும் தளி ஆகிய 10 வட்டாரங்களில், மொத்தம் 1,796 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் பதிவு செய்யப்பட்ட 6 மாதம் முதல் 6 வயதுக்குட்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1,136 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் வழங்கப்படுகிறது. இந்த பிஸ்கெட்டில் கோதுமை மாவு 30 சதவீதம், மைதா 10 சதவீதம், வேர்க்கடலை தூவல் 4 சதவீதம், கேழ்வரகு மாவு 7 சதவீதம், சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய் 24.74 சதவீதம், சர்க்கரை 23 சதவீதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் கலவை 1 சதவீதம், சமையல் சோடா 0.26 சதவீதம் என மொத்தம் 100 சதவீதம் மூலப்பொருட்களால் தயார் செய்யப்பட்டுள்ளது.

செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டில் புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ., பி- 1, பி- 2, நியாசின், போலிக் அமிலம் உள்ளிட்ட சத்துக்கள் குழந்தைகளுக்கு கிடைக்கிறது. செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் நாளொன்றுக்கு 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, 60 கிராம் அளவும், 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, 30 கிராம் அளவும் கொடுக்கப்பட வேண்டும். ஒரு பிஸ்கெட் சுமார் 15 கிராம் வீதம், ஒரு பாக்கெட்டில் 50 பிஸ்கெட்டுகள் இருக்கும். பிஸ்கெட்டுகள் மாதத்தில் ஒன்று அல்லது 2 முறை வீட்டிற்கே எடுத்துச்செல்லும் வகையில் வழங்கப்படவுள்ளது. மேலும், அங்கன்வாடி மையத்தில் இணை உணவுகள், நாளொன்றுக்கு 6 முதல் 12 மாத குழந்தைகளுக்கு 125 கிராமும், 6 முதல் 12 மாதக் குழந்தைகளுக்கு (கடுமையான ஊட்டச்சத்து குறைவுள்ளவர்களுக்கு) 125 கிராம் இணை உணவு மற்றும் வாரம் 3 முட்டை வழங்கப்படும்.

மேலும், ஒன்று முதல் 2 வயதிற்குட்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 125 கிராம் இணை உணவு, வாரம் 3 முட்டை மற்றும் 60 கிராம் பிஸ்கெட், 2 முதல் 3 வயது குழந்தைகளுக்கு 50 கிராம் இணை உணவு, மதிய உணவு மற்றும் 30 கிராம் பிஸ்கெட், 3 முதல் 6 வயது குழந்தைகளுக்கு 50 கிராம் இணை உணவு மற்றும் மதிய உணவு, 3 முதல் 6 வயதிற்குட்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, 50 கிராம் இணை உணவு, மதிய உணவு மற்றும் 30 கிராம் பிஸ்கெட், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 150 கிராம் அளவு இணை உணவும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 6 மாதம் முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி, கிருஷ்ணகிரி அடுத்த வெங்கடாபுரம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் நடந்தது. இதில் அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்யப்பட்ட 6 மாதம் முதல் 6 வயதுக்குட்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டுகளை கலெக்டர் சரயு வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், ‘மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி குழந்தைகள் 91 ஆயிரம் பேர் மற்றும் 25 ஆயிரம் கர்ப்பிணிகள், வளரிளம் பெண்கள் ஆரோக்கியமாக வாழும் வகையில் சத்துமாவு, ஊட்டச்சத்து மாத்திரைகள், ஆரோக்கிய உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டுகளும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம், மாவட்டத்தில் ஒரு லட்சம் குழந்தைகள் பயன் பெறுவர். இதை கிராமப்புறத்தில் உள்ள தாய்மார்கள், கர்ப்பிணிகள் மற்றும் 2 முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,’ என்றார். இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, பிடிஓ.,க்கள் முருகன், ராஜேஷ், தாசில்தார் சம்பத், புள்ளியியல் ஆய்வாளர் சீனிவாசன், ஒருங்கிணைந்த குழந்தைகள் பிடிஓ பத்மாவதி, ஊராட்சி மன்றத் தலைவர் ராஜா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்