கிரிக்கெட் பிரீமியர் லீக் போட்டிக்கு வீரர்கள் ஏலம் ஏராளமானோர் பங்கேற்பு குடியாத்தத்தில்

 

குடியாத்தம், ஜூலை 11: குடியாத்தம் கிரிக்கெட் பிரீமியர் லீக் போட்டிக்கு விளையாட்டு வீரர்கள் ஏலம் நடைபெற்றது. இதில் ஏராளமான உள்ளூர் வீரர்கள் பங்கேற்றனர். உலக அளவில் ஐபிஎல் கிரிக்கெட் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல், பல்வேறு பெருநகரங்களில் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் குடியாத்தம் கிரிக்கெட் பிரீமியர் லீக் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் 12 அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த அணிகளுக்காக வீரர்களை தேர்வு செய்ய ஐபிஎல் மற்றும் பெருநகரங்களில் நடைபெறும் கிரிக்கெட் அணி வீரர்கள் ஏலம் எடுப்பதைபோல் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.

இதில், குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 370 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்திருந்தனர். உள்ளூரில் இருந்து ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் ஆர்வத்துடன் இந்த ஏலத்தில் பங்கேற்றனர். ஒவ்வொரு அணிக்கும் 15 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம். ஒரு அணிக்கு 15 ஆயிரம் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வீரர் 5 முறை ஏலத்தில் பங்கேற்கலாம். குடியாத்தம் கிரிக்கெட் பிரீமியர் லீக் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தினத்தில் இருந்து தொடங்குகிறது. வெற்றி பெறும் அணிக்கு ₹50 ஆயிரம் பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு