புதுடெல்லி: அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய அணி முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார். 2010ல் கொழும்புவில் இலங்கைக்கு எதிராக நடந்த 2வது டெஸ்டில் (ஜூலை 26-30) அறிமுகமான ரெய்னா (35 வயது), தனது முதல் இன்னிங்சிலேயே சதம் விளாசி சாதனை படைத்தார் (120 ரன்). அந்த இன்னிங்சில் சச்சின் 203 ரன், சேவக் 99 ரன் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக 18 டெஸ்டில் 768 ரன் (அதிகம் 120, சராசரி 26.48, சதம் 1, அரை சதம் 7), 13 விக்கெட்; 226 ஒருநாள் போட்டியில் 5615 ரன் (அதிகம் 116*, சராசரி 35.31, சதம் 5, அரை சதம் 36) மற்றும் 36 விக்கெட்; 78 டி20ல் 1605 ரன் (அதிகம் 101, சராசரி 29.18, சதம் 1, அரை சதம் 5) மற்றும் 13 விக்கெட் எடுத்துள்ளார்.ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்ட ரெய்னா, 2020ல் தோனி ஓய்வு பெற்றபோது தானும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் உத்தரப்பிரதேச அணிக்காகவும் களமிறங்கி ஆல் ரவுண்டராக அசத்தியுள்ளார். தற்போது அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ரெய்னா அறிவித்திருந்தாலும், பிசிசிஐ கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டுள்ளதால் வெளி நாடுகளில் நடக்கும் உள்ளூர் டி20 போட்டிகளில் அவர் இனி களமிறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. …