நத்தம், செப். 17: நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சி பூசாரிபட்டியில் மந்தை முத்தாலம்மன் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயில் அருகேயுள்ள இடத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதனால் கோயில் பணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பூசாரிபட்டி கிராமமக்கள் 200க்கும் மேற்பட்டோர் நேற்று காலை அப்பகுதியில் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் நத்தம் வருவாய் துறை, காவல் துறையினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆக்கிரமிப்பு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். திடீர் மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.