போளூர், ஆக.15: போளூர் அருகே பெண் விஏஓவை அவதூறாக பேசிய கிராம உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா, முருகாபாடி கிராம நிர்வாக அலுவலராக மீனா என்பவரும், கிராம உதவியாளராக போளூரை சேர்ந்த நவீன்குமார் என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கிராம உதவியாளர் நவீன்குமார் மீது விஏஓ மீனா போளூர் போலீசில் நேற்று புகார் அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: புதிதாக பணிக்கு வந்த கிராம உதவியாளர் நவீன்குமார் அலுவலகத்தில் சினிமா பாடலை சத்தமாக கேட்டு கொண்டிருந்தார். அதை நிறுத்தும்படி கூறினேன். அதற்கு, அவர் `என்னை கேட்க நீ யார், உன் வேலையை மட்டும் பார்’ என ஆபாசமான வார்த்தைகளால் பேசினார். தொடர்ந்து, கிராமத்தில் நூறு நாள் வேலை செய்பவர்கள் ஏன் இப்படி பேசுகிறாய்? என கேட்டபோது அவர்களையும் ஆபாசமான வார்த்தைகளால் பேசினார். இதுகுறித்து போளூர் தாசில்தாரிடம் தகவல் தெரிவித்துள்ளேன். எனவே, அவருக்கு சம்பளம் போட வேண்டாம் என தாசில்தார் தெரிவித்தார். இந்த தகவலை தெரிந்து கொண்ட நவீன்குமார் வழியில் என்னை மடக்கி மிரட்டினார். இதனால், எனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டு உள்ளது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.