கராக்கஸ்: கியூபாவின் புரட்சி நாயகரான சேகுவேராவின் மகன் கமிலோ குவேரா காலமானார். கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியில் ஈடுபட்டு, ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டவர் சேகுவேரா. புரட்சியாளர், டாக்டர், அரசியல்வாதி, இலக்கியவாதி என பன்முகத்தன்மை கொண்டவர். இவருக்கு 4 மகன்கள். அவர்களில் 3வது மகன் கமிலோ சேகுவேரா. வயது 60. கியூபாவில் தனது மகளுடன் வசித்து வந்தார். கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள சேகுவேரா ஆய்வு மையத்தின் இயக்குனராக இருந்து வந்தார். அதில் சேகுவேராவின் கிளர்ச்சி தொடர்பான ஆவணங்கள் மற்றும் பிற பொருட்கள் உள்ளன. அதை கமிலோ சேகுவேரா, தனது தாயார் அலீடா மார்சுடன் இணைந்து கவனித்து வந்துள்ளார். பெரும்பாலும் இவர் பொது வெளியில் நடைபெறும் நிகழ்வுகளில் அதிகம் கலந்து கொள்ளாமல் இருந்துள்ளார்.சில நேரங்களில் அவரது தந்தையை கவுரவிக்கும் நிகழ்வுகளில் மட்டுமே கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெனிசுலா நாட்டுக்கு சென்றிருந்த கமிலோ சேகுவேரா கடந்த 29ம் தேதி நுரையீரல் ரத்த உறைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதை அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான பிரென்சா லத்தினா தெரிவித்துள்ளது. கமிலோவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கியூபா அதிபர் மிகுவல் டியாஸ் கேனல் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் ‘ஆழ்ந்த வலியுடன், சேகுவேராவின் மகனும் அவரது யோசனைகளை ஊக்குவிப்பவருமான கமிலோவிடம் நாங்கள் விடைபெறுகிறோம்’ என குறிப்பிட்டுள்ளார்….