ஈரோடு, செப். 30: ஈரோடு மாவட்டம், பெருந்துறை, பட்டக்காரன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகசாமி (83). இவருக்கு லேசான கண் பார்வை கோளாறு உள்ளது. இந்நிலையில், நேற்று முன் தினம் மதியம் தோட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த மோட்டாரை நிறுத்துவதற்காக கிணற்றின் அருகில் முருகசாமி சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கால் தவறி அவர் கிணற்றுக்குள் விழுந்துவிட்டார்.
இதையறிந்த அவரது மகன் சுப்ரமணி (53), உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கிணற்றுக்குள் விழுந்த முருகசாமியை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே முருகசாமி இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.