கிணற்றில் தவறி விழுந்து 11 பேர் பலி : உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மாநில அரசு ரூ. 5 லட்சம் நிதியுதவி; ரூ. 2 லட்சம் வழங்க மோடி உத்தரவு

விதிஷா : மத்தியப் பிரதேசத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை மீட்கும் பணியை பார்வையிட்ட சென்றபோது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் 50 அடி ஆழம் கொண்ட கிணற்றில் சிறுமி தவறி விழுந்துவிட்டாள். சிறுமியை மீட்கும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டிருந்தனர். 50 அடி ஆழ கிணற்றில் சுமார் 20 அடிக்கு தண்ணீர் இருந்ததாக கூறப்படுகிறது. கிணற்றுக்குள் இறங்கி சிலர் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கிராமமக்கள் கிணற்றில் சுற்றுச்சுவர் அருகே நின்று மீட்பு பணிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் அங்கு நின்றிருந்த சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்ததும் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. முதல் கட்டமாக 2 பேர் பலியானதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கிணற்றில் இருந்து 19 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 11 பேர் பரிதாபமாக மூச்சுத் திணறி பலியாகினர். மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்கிறது. இந்த சம்பவத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார். மேலும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டார். …

Related posts

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் போதைப்பொருள் பறிமுதல்

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கனமழையால் நூற்றுக்கணக்கான லாரிகள் வெள்ளத்தில் மூழ்கியது