Sunday, September 8, 2024
Home » காஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து தீயில் கருகி 3 குழந்தைகள் பலி: தாய் கவலைக்கிடம்

காஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து தீயில் கருகி 3 குழந்தைகள் பலி: தாய் கவலைக்கிடம்

by Karthik Yash

சென்னை, மார்ச் 2: செங்கல்பட்டு பகுதியில் காஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். அவர்களது தாய் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு பெரிய மணியக்கார தெருவில் வசிப்பவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சதாம் (28). இவரது மனைவி ரோஜி குத்தூன் (28). இவர்களது மகள்கள் ரஜியா பர்வீன் (8), சயாலி (5), மகன் ஆப்தாப் (2). செங்கல்பட்டு ரயில்வே கேண்டீனில் சதாம் சமையல் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்ற நிலையில், மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

அப்போது, ரோஜி குத்தூன் குழந்தைகளை வீட்டின் உள்ளே வைத்து கதவை மூடிவிட்டு, அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அவர் திரும்பி வந்து, சமையலறையில் உள்ள மின்விளக்கு சுவிட்ச்சை ஆன் செய்தபோது, காஸ் சகிவு காரணமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டு, சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது. இதில் ரோஜி குத்தூன், மகள்கள் ரஜியா பர்வீன், சயாலி, 2 வயது மகன் அல்தாப் உள்பட 4 பேரும் தீயில் சிக்கி படுகாயமடைந்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தண்ணீர் ஊற்றி, தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து, பலத்த காயமடைந்த 4 பேரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் ஆப்தாப் உயிரிழந்தான்.

மற்ற 2 குழந்தைகள் மற்றும் தாய்க்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வந்த ரஜியா பர்வீன், சயாலி ஆகிய 2 குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். தாய் ரோஜி குத்தூன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, செங்கல்பட்டு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், எஸ்ஐ டில்லிபாபு ஆகியோர் வழக்கு பதிந்து செய்தனர். சம்பவ இடத்திற்கு சென்று காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டனர். மேலும், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் செங்கல்பட்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, காஸ் கசிவு ஏற்பட்டுதான் சிலிண்டர் வெடித்ததா அல்லது வேறு ஏதேனும் வெடி பொருள் வீட்டில் இருந்ததால் தீவிபத்து ஏற்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர். காஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

fifteen − fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi