Sunday, September 29, 2024
Home » காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாயை தூர்வார வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாயை தூர்வார வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

by kannappan

காவேரிப்பாக்கம் : காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய் தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவேரிப்பாக்கம் ஏரி சுமார் 3968 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டு அமைந்துள்ளது. இந்த ஏரி தமிழகத்தின் 3வது பெரிய ஏரியாக விளங்கி வருகிறது. இந்த ஏரி ஒருமுறை நிரம்பி வழிந்தால் 3 போகம் அறுவடை செய்யலாம் என்பது, சிறப்பு தன்மை. ஏரி நிரம்பிய காலங்களில் நரிமதகு, சிங்கமதகு, மூலமதகு, பள்ளமதகு, உள்ளிட்ட 10-மதகுகள் வாயிலாக கால்வாய் மூலம் நேரடியாக தண்ணீர் பெறப்பட்டு சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது.           இந்நிலையில்  அய்யம்பேட்டைசேரி  அருகே உள்ள மூலமதகு கால்வாய் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்  பழுதாகி ஏரியில் இருந்து நீர் வராமல் தடைப்பட்டது. இருப்பினும் அதிகளவில் தண்ணீர் வராமல், மதகு வழியாக சிறிதளவு தண்ணீர் மட்டுமே வந்து கொண்டுள்ளது. இந்த நீரைப் பயன்படுத்தி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.         இந்நிலையில், மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், காவேரிப்பாக்கம் ஏரியின் மூலமதகு கால்வாய் வழியாக தண்ணீர் வருகிறது. இந்த கால்வாய் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக  போதிய அளவு பராமரிப்பு இன்றி உள்ளதால் கால்வாயில் மழை நீர் செல்ல வழியின்றி தாழ்வான பகுதிகளில் உடைப்பு ஏற்படுகிறது. இதனால், நிலங்களில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராகி வரும் நெல் வயலில் தண்ணீர் புகுந்து பெருத்த சேதம் ஏற்படுகிறது. மேலும், வாழை தோட்டத்தில் நாள் கணக்கில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மூலமதகில் வெளியேறும் நீர் கால்வாய் வழியாக சுமார் 500ஏக்கர் நிலப்பரப்பில் தண்ணீர் பாய்ச்சி இறுதியாக, அபிராமச்சேரி வழியாக சென்று மடுவு பகுதிக்கு சென்று விடும். இதனால் பயிர்கள் சேதம் ஏற்படாது. ஆனால், அபிராமச்சேரி கால்வாயும் பராமரிப்பின்றி தூர்வாராமல் முட்புதர்கள் மண்டி தண்ணீர் வெளியேற வழியின்றி உள்ளதால் விவசாய நிலங்களில் தற்போது தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கால்வாயை தூர்வாரி சீரமைக்கக்கோரியும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், விவசாயிகள் மழைநீரை வெளியேற்ற, கையில் இருக்கும் பணத்தை வைத்து அபிராமச்சேரி கிராமம் அருகே ஜேசிபி உதவியுடன் சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு சீரமைத்தனர். இதற்கிடையில், பணம் பற்றாக்குறை காரணமாக பாதியிலேயே  பணியை நிறுத்திவிட்டனர்.  தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் அபிராமச்சேரி கால்வாயின் கீழ் பகுதியில் விவசாயம் செய்துள்ள விவசாயிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு அபிராமச்சேரி கால்வாயை சீரமைப்பு செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர்….

You may also like

Leave a Comment

four × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi