காவேரிப்பட்டணம் அருகே கந்துவட்டி கொடுமையால் டிரைவர் தற்கொலை-உறவினர்கள் சாலை மறியல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த மலையாண்டஹள்ளி அருகே உள்ள விநாயகபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த்(30). டிராக்டர் டிரைவர். ராமாபுரத்தை சேர்ந்தவர்கள் ராஜேஷ், சிவக்குமார். சகோதர்களான இவர்கள் பைனான்ஸ் நடத்தி வருகின்றனர். இவர்களிடம் கடந்த 8 மாதங்களுக்கு முன் ஆனந்த் ₹1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன் வரை வாங்கிய கடனுக்கு, ₹1.60 லட்சம் வட்டியுடன் கடனை கொடுத்துள்ளார். இந்நிலையில், மேலும் ₹50 ஆயிரம் கொடுத்தால்தான் கடன் முடியும் எனக்கூறி ராஜேசும், சிவக்குமாரும் ஆனந்தை மிரட்டியுள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன் அவரது டூவீலரை பிடுங்கி வைத்துள்ளனர். மேலும், அவரது டிராக்டரையும் பிடுங்க முயன்றுள்ளனர். இதுகுறித்து போலீசில் புகாரளிக்க சென்ற ஆனந்தையும் அடித்து உதைத்துள்ளனர். அதேபோல் விநாயகபுரம், கன்னிநகரை சேர்ந்த தமிழரசன் என்பவரிடம் ஆனந்த் சீட்டு போட்டுள்ளார். சீட்டுப்பணத்தை தமிழரசன், ஆனந்துக்கு கொடுக்காத நிலையில், மாதச்சீட்டு பணத்தை முதலில் கட்டு எனக்கூறி ஆனந்தை மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த ஆனந்த், நேற்றுமுன்தினம் மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆனந்தின் சாவுக்கு காரணமான பைனான்ஸ் மற்றும் சீட்டு நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தாமதப்படுத்துவதாக கூறி ஆனந்தின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனை முன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் முரளி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என வாக்குறுதி அளித்த பின் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். …

Related posts

திருப்பத்தூர் அருகே கணவரின் தகாத உறவால் குழந்தையை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் கைது: ராணுவ வீரரிடம் போலீசார் விசாரணை

புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் வாங்கி குடித்த முதியவர் சாவு

கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி சம்பவம்; பணத்தாசையால் 2,000 லி. மெத்தனாலை பெட்ரோல் பங்கில் பதுக்கிய மாதேஷ்: சீல் வைப்பு