சேலம்: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,491 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலத்தில் கபினி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினியில் நீர் நிரம்பிய நிலையில் இருப்பதாலும், கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீர் நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வர தொடங்கியது. நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 3,046 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 7,491 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 14,000 கனஅடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 74.99 அடியில் இருந்து 74.30 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 36.51 டி.எம்.சி.யாக உள்ளது. …