காவல் துறையினர் சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு

மதுரை: காவல்துறையினர் சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழ வேண்டுமென டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்களை முற்றிலும் தடுத்து காவல் நிலைய மரணங்கள் இல்லாத நிலையை உறுதி செய்யும் வகையில், போலீஸ் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக காவல்துறை, குரலற்றவர்களின் குரல் அமைப்பு சார்பில் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தியாகராஜர் கலைக்கல்லூரியில் கருத்தரங்கு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பேசியதாவது: காவல்துறை தொடங்கப்பட்டதில் இருந்தே காவல்துறை மீது துன்புறுத்தல் புகார்கள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் 80 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 2018ம் ஆண்டு 18 காவல் நிலைய மரணங்கள், 2021ல் 4 பேர், 2022ல் 2 காவல் நிலைய மரணங்கள் மட்டுமே நடந்துள்ளன. காவல் மரணங்கள் நிகழக்கூடாது என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் காவல்துறையினர் செயல்பட வேண்டும். தவறு செய்யாமலே சில நேரங்களில் காவல்துறையினர் மீது புகார்கள் வருகின்றன. 80 காவல் நிலைய மரணங்களில் 12 வழக்குகளில் மட்டுமே காவல்துறையினர் மீது தவறு இருந்து சிபிசிஐடி விசாரணை செய்கிறது. இதில் 48 காவல்துறை அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிலர் உடல்நலக் குறைவால் தற்கொலை செய்து கொள்வர். ஆனால் அதற்கும் காவல்துறை மீது குற்றம் சாட்டப்படும். காவல் நிலையத்தில் குற்றவாளிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என போலீசார் தெரிந்து கொள்ள வேண்டும். காவலர்கள் உளவியலும், அறிவியலும் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு காவல்துறை பாரம்பரியமிக்கது. யாரையும் துன்புறுத்த மாட்டார்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சம்பவங்கள் நிகழ்கின்றன. அதுவும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். காவல்துறை அரசாங்கத்தின் அங்கம். சட்டத்தின் பார்வையில் காவல்துறை இருக்கிறது. சட்டத்திற்கும், மனசாட்சிக்கும் உட்பட்டு காவல்துறை செயல்பட வேண்டும். காவல்துறையினர் சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், எஸ்பி சிவபிரசாத் மற்றும் தென் மண்டலத்தை சேர்ந்த போலீஸ்  அதிகாரிகள்,  ஐகோர்ட் மதுரை  கிளை வக்கீல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். …

Related posts

அம்ரித் பாரத் திட்டத்தில் கிண்டி ரயில் நிலையம் மறுசீரமைப்பு: செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும்

திருவான்மியூர் பாம்பன் சாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு

வங்கி ஆவணங்களை வழங்கக் கோரிய செந்தில் பாலாஜி வழக்கு 8ம் தேதிக்கு தள்ளிவைப்பு