செங்கல்பட்டு: சென்னை புறநகர் பகுதியான தாம்பரத்தில் கால்நடைகளை பராமரிக்க தொழுவம் மற்றும் மேய்ச்சல் நில வசதி செய்து தரக்கோரி, கால்நடை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில், கலெக்டர் ராகுல்நாத்திடம் கோரிக்கைமனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது. செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட கால்நடை விவசாயிகள், மாடுகளை வளர்ந்து, அதன்மூலம் பால் வியாபாரம் செய்கிறார்கள். தற்போது தாம்பரம், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.எனவே, சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை, அதிகாரிகள் பறிமுதல் செய்வது மட்டுமின்றி, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளதுள்ளனர். இதனால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, கால்நடைகளை பராமரிக்க, தொழுவம் மற்றும் மேய்ச்சல் நில வசதி செய்து தர வேண்டும். மேலும், பால் உற்பத்தியை பெருக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது….