திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து மாவட்ட விளையாட்டு மைதானம், வீராங்கனைகள் தங்கும் விடுதி, நீச்சல் குளம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மாண்புமிகு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று காலை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, கூடுதல் தலைமைச் செயலர் (இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை) டாக்டர் அதுல்யாமிஸ்ரா, இ.ஆ.ப., அவர்கள், நில நிர்வாக ஆணையர் மற்றும் அரசு சிறப்புச் செயலர் திரு.எஸ்.நாகராஜன், இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு.கே.பி.கார்த்திகேயன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர். இதேபோல், திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் உள்ள திண்டுக்கல் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாண்புமிகு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி குழந்தைகள் பாடத்திட்டத்தில் உள்ள பாடலை பாடினர். பள்ளியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், குழந்தைகளுக்கு காலை உணவு பரிமாறி, உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். பள்ளி வளாகம் துாய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை பார்வையிட்டு, சுகாதார வளாகத்தையும் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பார்வையிட்டார். அங்கு வீராங்கனைகள் விடுதியில், மாணவிகள் தங்கும் அறைகள், சமையலறை, உணவு வகைகளை பார்வையிட்டு, மாணவிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், உணவு வகைகளின் தரம் ஆகியவை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து நீச்சல் குளத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வீராங்கனைகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி ஆர்.ஏ.பிரியங்கா, இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி துணை மேயர் திரு.எஸ்.ராஜப்பா, மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமதி ம.ரோஸ் பாத்திமா மேரி, ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்….