புதுக்கோட்டை,மார்ச் 5: புதுக்கோட்டை மாவட்ட கிள்ளுக்கோட்டை பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் காலாவதியான பூச்சி மருந்தை கொடுத்ததால் ஏழு ஏக்கர் நெற்பயிர் கருகிவிட்டது. இதனால் ரூ.4 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அதனால் தனக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட கிள்ளுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் விவசாயி இருதயராஜ். அவருடைய நிலத்தில் 7 ஏக்கர் நெற்பயிர் விவசாயம் செய்துள்ளார். இந்நிலையில் அவரது கிராமத்திற்கு அருகே இருந்த தனியார் பூச்சி மருந்து கடையில் அவரது நெற்பயிருக்கு அடிக்க பூச்சி மருந்துகளை வாங்கி உள்ளார். மேலும் அந்த தனியார் பூச்சி மருந்து கடையில் வாங்கப்பட்ட பூச்சி மருந்தை ட்ரோன் மூலம் ஏழு ஏக்கர் நெற்பயிர்களிலும் தனியார் பூச்சி மருந்து கடை விற்பனையாளர்களே ஆட்களை வைத்து பூச்சி மருந்தை தெளித்துள்ளனர்.
இந்நிலையில் பூச்சி மருந்து அடித்த இரண்டு நாளில் ஏழு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் அனைத்தும் கருகி வீணாகி விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி இருதயராஜ் சம்பந்தப்பட்ட பூச்சி மருந்து கடைக்குச் சென்று கடைகாரிடம் இங்கு வழங்கப்பட்ட பூச்சி மருந்து தெளித்ததால், தான் நெற்பயிர்கள் அனைத்தும் வீணாகிவிட்டது என கேட்டதற்கு கடையின் உரிமையாளர் முறையாக பதில் அளிக்காமல் கடையையும் பூட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட பூச்சி மருந்து கடையில் வாங்கப்பட்ட பூச்சி மருந்தை சோதனை செய்த பொழுது அந்த மருந்து ஏற்கனவே காலாவதியாகி இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட விவசாய இருதயராஜ் அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு காலாவதியான பூச்சி மருந்தை தெளித்ததால் 7 ஏக்கர் நெற்பயிர் வீணாகி ரூ.4 லட்ச இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எனவே எனக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும். பயிர்களுக்கு காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை அடுத்து நேற்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற விவசாயி இருதயராஜ் காலாவதியான பூச்சி மருந்தை தெளித்து தனது 7 ஏக்கர் நெற்பயிர்கள் நாசமாகிவிட்டதாகவும் இதனால் தனக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் உரிய முறையில் ஆய்வு செய்து தனக்கு முறையான இழப்பீடு வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனு அளித்துள்ளார்.
விராலிமலை,மார்ச் 5: தமிழக நீர் வளத்துறை மூலம் முறையாக டெண்டர் அறிவிப்பு வெளியிட்டு, காவிரி மணல் விற்பனை செய்துக்கொள்ள தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டு காவிரி ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளப்பட்டு இ ரசீது மூலம் கடந்த அக்டோபர் மாதம் வரை கரூர், திருச்சி ஆற்றுப்படுகைகளில் லாரிகள் மூலம் மணல் ஏற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் மணல் விற்பனையில் ஒரு சில முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி சில மாதங்களுக்கு முன் மணல் குவாரிகளை மூட அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் ஆற்று காவிரி மணல் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து எம் சாண்ட் எனும் தயாரிப்பு மணல் தொடர்ந்து விலையேற்றம் கண்டு வருகிறது. இதனால் புதிய வீடு கட்டுவோர் நிர்ணயம் செய்த தொகையைவிட 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை கட்டுமானத்திற்கு கூடுதல் செலவு செய்யவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தான், காவிரி மணல் விலையை கருத்தில் கொண்டு சேமித்துவைத்த தொகை மற்றும் திரும்ப செலுத்த கூடிய அளவிற்கு கடன் பெற்று அதற்கு ஏற்றார் போல் வீடு கட்டுவதற்கு மதிப்பீடு தயார் செய்து வீட்டை கட்டத்தொடங்கியவர்களின் நிலை தற்போது, கூடுதல் கடனாளியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் என்பது காவிரி மணல் தட்டுப்பாடு என்கின்றனர் புதிய வீடு கட்டுவோர். தற்போதைய நிலையில் வீடு கட்ட வேண்டும் என்றால் எம் சாண்ட், பி சாண்ட் என்ற தயாரிப்பு மணலை மட்டுமே நம்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாக விலையேற்றம் கண்டு வரும் தயாரிப்பு மணல் எம்-சான்ட் மட்டுமே தற்போது பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் நிர்ணயம் செய்த தொகையை காட்டிலும் கூடுதல் செலவு செய்யவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் வரை அதாவது, அதிமுக ஆட்சி காலத்தில் சாதாரன ஆற்று மணல் கூட குறைந்த பட்ஜெட்டில் வீடு கட்டுவோர் வாங்க முடியாத நிலையில் இருந்து வந்தது. ஒரு யூனிட் மணல் வெளிச்சந்தையில் 5 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆனது (அள்ளப்படும் இடங்களில் இருந்து 20 கிமீ தொலைவுக்குள்) திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் சொந்த வீடு கட்டுவோரின் மனநிலையை கருத்தில் கொண்டு காவிர் மணல் விற்பனையை முறைபடுத்தினர். அந்தவகையில் ஒரு யூனிட் காவிரி மணல் 3 ஆயிரத்திற்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது (40 கிமீ தூரம் வரை) இதன் மூலம் சாமானியனும் காவிரி மணல் மூலம் வீடுகட்டலாம் என்ற நிலையை திமுக ஆட்சி உருவாக்கி தந்தது என்கிறார் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளி.
இந்த நிலையில் தான் ஒன்றிய அரசின் பழிவாக்கும் நடவடிக்கையை தமிழ்நாட்டின் மீது திருப்பியது.அதன் ஒரு பகுதியாக காவிரி ஆற்று மணல் சேமிப்பு நிலையம், மணல் அள்ளப்பட்டு வந்த திருச்சி,கரூர் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கதுறை அதிகாரிகள் திடீர் என்று சோதனைகள் நடத்தினர். இதில், அரசு நிர்ணயித்த அளவை காட்டிலும் அதிக அளவு ஆழம் தோண்டி மணல் அள்ளப்பட்டு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி காவிரி மணல் விற்பனையை முடக்கியுள்ளது.
ஒரு யூனிட் எம் சாண்ட் ரூ.4 ஆயிரம் மற்றும் ஆயிரம் ரூபாய் போக்குவரத்து கட்டணம்(குறைந்த தூரத்திற்கு), பி சாண்ட் யூனிட் ரூ.5 ஆயிரம் மற்றும் ஆயிரம் ரூபாய் போக்குவரத்து கட்டணம் என்ற அடிப்படையில் தற்போது விற்பனையாகிறது. அந்த வகையில் ஒரு வீடு கட்டி முடிக்க நிர்ணயம் செய்த தொகையைவிட 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை கட்டுமானத்திற்கு கூடுதல் செலவு செய்யவேண்டிய நிலைக்கு புதிய வீடு கட்டுவோர் தள்ளப்பட்டுள்ளனர்.