காலண்டரில் அட்டவணை போட்டு மருத்துவ கல்லூரிகளில் லேப்டாப் திருடிய பட்டதாரி பிடிபட்டார்: தினமும் 2 லேப்டாப் டார்கெட்; ஆன்லைனில் விற்றது அம்பலம்

சென்னை: ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி மருத்துவம் பயின்று வரும் ருத்ரேஷ் உட்பட 2 பேரின் லேப்டாப் கடந்த சில நாட்களுக்கு முன் திருடுபோனது. புகாரின்பேரில், வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் லேப்டாப்களை திருடிச் சென்றது தெரியவந்தது. அவரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று தனிப்படை போலீசார் ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் கண்காணிப்பில் இருந்தபோது, அங்கு சந்தேகப்படும்படி சென்ற வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (25) என்பதும், லேப்டாப் திருட்டில் ஈடுபட்டவர் என்பதும் தெரிந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், இவருக்கு பெற்றோர் இல்லை என்பதும், டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பி.ஏ பொருளாதார பிரிவில் பட்டப்படிப்பு படித்ததும், தொலைதூர கல்வி மூலம் பி.எல் படிப்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: பிடிபட்ட தமிழ்செல்வன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மருத்துவ கல்லூரியில் உடன் பயின்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால், இவரிடம் பண வசதி இல்லாததால் அந்த காதல் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த தமிழ்செல்வன், இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளை காலண்டரில் அட்டவணை போட்டு, தினசரி ஒரு கல்லூரி வீதம் சென்று லேப்டாப்களை திருடி, அதன் வெளித்தோற்றத்தை மாற்றி இணையதளத்தில் விற்பனை செய்து வந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார், செம்மஞ்சேரி பகுதியில் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அங்கு அவர் ஏற்கனவே திருடி வைத்திருந்த 31 லேப்டாப்கள் இருந்தது. மேலும் அங்கிருந்த காலண்டரில் தினமும் ஒரு கல்லூரி என கல்லூரியின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது தெரியவந்தது. அங்கிருந்த லேப்டாப்களை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

Related posts

தஞ்சையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி மோசடி 2 ஆண்டாக தலைமறைவாக இருந்தவர் கைது

பானி பூரி வியாபாரி வீட்டில் 30 சவரன் கொள்ளை

தேனியில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது