காரைக்கால், அக்.6: காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு அடுத்த புத்தகுடி கன்னி கோவில் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன்(30). இவர் நேற்று முன்தினம் கீழகாசாக்குடி மெயின் ரோட்டில் பைக்கில் சென்றார். அவருக்கு அடுத்தபடியாக காரைக்கால் தர்மபுரம் அஸ்மா அவென்யூவை சேர்ந்த அபுபக்கர் சித்திக்(29) தனது காரை ஓட்டிச் சென்றார்.
அப்போது கோட்டுச்சேரி பகுதியிலிருந்து தறிகெட்டு பைக்கை ஓட்டி வந்த மருத்துவக் கல்லூரி மாணவர் கோயம்புத்தூர் தடாகம் சாலையைச் சேர்ந்த அபிஷேக்(28) அபூபக்கர் சித்திக் ஓட்டி சென்ற கார் மீதும், விக்னேஸ்வரன் ஓட்டிச் சென்ற பைக் மீது அடுத்தடுத்து மோதினார். இதில் கார் சேதமடைந்த நிலையில், பைக்கில் சென்ற விக்னேஸ்வரனின் இடது கால் முறிந்தது. விபத்து தொடர்பாக விக்னேஸ்வரனின் உறவினர் மோகன்(55) கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காரைக்கால் வடக்கு போக்குவரத்து போலீசார் மேற்படி அபிஷேக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.