காரமடை, ஜூன் 15: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் பிரகலதா தலைமையில் நேற்று காரமடை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 50,000 காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும், ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு ரூ.6,750 அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வுபெறும் வயதை 60லிருந்து 62 ஆக உயர்த்த வேண்டும்.
பிஎட் படித்த சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், தமிழக முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைத்து சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கோஷங்களை எழுப்பினர். இதில், ஒன்றிய செயலாளர் சிந்துஜா, பொருளாளர் தேவகி, துணைத்தலைவர் ஆனந்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட காரமடை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்கள், சமையல், உதவியாளர் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.