கோவை: கோவை அருகே வயிற்றில் காயமடைந்த நிலையில், வனத்துறை அதிகாரிகளால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த காட்டுமாடு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கோவை வனச்சரகம் தடாகம் தெற்கு சுற்று எல்லைக்குட்பட்ட தடாகம் காப்பு காட்டிற்கு வெளியே சுமார் 300 மீட்டர் தொலைவில் காட்டு மாடு ஒன்று நேற்று முன்தினம் சுற்றி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் காட்டு மாட்டை கண்காணித்தனர். அப்போது, அந்த மாட்டின் வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டு இருந்ததும், உடல் மெலிந்த நிலையில் காட்டு மாடு இருந்ததும் தெரியவந்தது. பின்னர், மாவட்ட வனஅலுவலர் அசோக்குமார் உத்தரவின் பேரில், வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார் காயமடைந்த காட்டு மாட்டிற்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று காட்டு மாட்டிற்கு கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், காட்டுமாடு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. பின்னர், அதன் உடல் பரிசோதனை செய்யப்பட்டது.இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ”உயிரிழந்த காட்டு மாட்டிற்கு 8 முதல் 9 வயது இருக்கலாம். மாட்டின் அடிநெஞ்சு பகுதியில் சுமார் 25 செ.மீ. ஆழத்திற்கு காயம் ஏற்பட்டிருந்தது. இந்த காயம் ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் இருக்கும். அப்போது, அதிக ரத்த போக்கு ஏற்பட்டு இருக்கும். இதனால், கடந்த ஒரு மாத்திற்கு மேலாக மாட்டினால் உணவு சரிவர சாப்பிட முடியாமல் உடல் மெலிந்து இருந்தது. காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், காட்டுமாடு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது” என்றனர்….