ஊட்டி, ஜூலை 17: ஊட்டி அருகே காத்தாடிமட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா நடந்தது. தலைமையாசிரியர் நடராஜன் தலைமை வகித்தார். நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முத்துராமன் வரவேற்றார். குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் கருத்தாளராகக் கலந்துகொண்டு பேசுகையில், ‘‘இளைய சமுதாயத்தை இலக்காகக் கொண்டு நுகர்வு வலை பின்னப்படுகிறது. தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச், வட்டியில்லா ஈஎம்ஐ ஆன்லைன் வர்த்தகம் என்று பல்வேறு உத்திகளைக் கையாண்டு பொருட்களை நுகர்வோர் தலையில் கட்டி விட வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. விளம்பரங்கள் வாயிலாக மூளைச்சலவை செய்யப்படுகிறது.
எனவே தேவையில்லாத பொருள்களை வாங்கி குவிக்கும் கலாசாரம் வளர்ந்து வருகிறது. இதனால் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதிக உற்பத்தி காரணமாக சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் நோய்களுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர். எனவே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பள்ளிகளில் நுகர்வோர் மன்றங்கள் அமைக்கப்பட்டன. நுகர்வோர் அமைப்புகள், நுகர்வோர் பாதுகாப்பு சார்ந்த அரசு அலுவலர்கள், பிஐஎஸ், அக்மார்க் போன்ற தரநிர்ணய அமைப்புகளை பள்ளிகளுக்கு அழைத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்’’ என்றார். முடிவில் ஆசிரியர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.