வேலூர், நவ.21: காட்பாடி அரசு விடுதியில் தங்கியிருந்த 2 மாணவிகள் கடத்தப்பட்டார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் அரசினர் பெண்கள் விடுதி உள்ளது. இங்கு 25க்கும் மேற்பட்ட ஆதரவற்ற பெண் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் காட்பாடியில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற 8ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் மாலையில் விடுதிக்கு திரும்பவில்லை. அவர்களை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து காட்பாடி போலீசில் விடுதி காப்பாளர் சாந்தி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவிகளை தேடி வருகின்றனர். மாணவிகளை யாராவது ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.