முசிறி, ஏப்.21: முசிறி ஒன்றியத்தில் காட்டுக்குளம் ஊராட்சியில் சுமார் 30 கூலித்தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் அடையாள அட்டை கடந்த இரண்டு வருடங்களாக வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து கூலி தொழிலாளர்கள் முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் வந்து ஒன்றிய ஆணையர் சந்திரசேகரனிடம் இது குறித்து முறையிட்டனர். அதற்கு பதில் அளித்த ஒன்றிய ஆணையர் சந்திரசேகரன் தொழிலாளர் கூறிய அடையாள அட்டை இன்னும் ஒரு வார காலத்திற்குள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தொழிலாளர்கள் தனித்தனியாக கோரிக்கை மனு எழுதி தருமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் தனித்தனியாக கோரிக்கை மனு எழுதி ஒன்றிய ஆணையரிடம் வழங்கி சென்றனர்.