சென்னை: காஞ்சிபுரம் விப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன்கள் சாந்தகுமார், பிரேம்குமார், உமேஷ்குமார். மூத்த மகன் சாந்தகுமார், கடந்த 2012ம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இளையமகன் உமேஷ்குமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் படிக்கும்போது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரேம்குமார் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு, குடும்பம் நடத்தி வந்துள்ளார். அவர்மீது, காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் வழிப்பறி, மணல் கடத்தல் உள்பட 7க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தவேளையில் பிரேம்குமார், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது, மர்மநபர்கள் சிலர் பிரேம்குமாரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதுதொடர்பாக, காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர்.இந்நிலையில், பிரேம்குமார் கொலை வழக்கு தொடர்பாக விப்பேடு பகுதியை சேர்ந்த சுரேன் (35). விக்னேஷ் (29) ஆகியோர் விழுப்புரம் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் அருண் உத்தரவிட்டார். தொடர்ந்து அவர்கள், போலீஸ் பாதுகாப்புடன் வேடம்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில், காஞ்சிபுரம் தாலுகா போலீசார், விழுப்புரம் கோர்ட்டில் சரணடைந்த 2 பேரையும், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தினால், கொலைக்கான காரணம் தெரியும் என போலீசார் தெரிவித்தனர்….