காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட விடுதிகளில் தங்கி பயில பிற்படுத்தப்பட்ட மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவியர்களுக்கென 4 பள்ளி விடுதிகள் செயல்படுகின்றன. கல்லூரி பயிலும் மாணவியர்கள் அருகில் உள்ள பள்ளி மாணவியர் விடுதிகளில் தங்கி பயில செப்டம்பர் முதல் வாரத்தில் விண்ணப்பம் வழங்கலாம். விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவிகளுக்கும் உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும். விடுதிகளில் சேருவதற்கான தகுதிகளானது, பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். தகுதியுடைய கல்லூரி மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடமிருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ கட்டணம் எதுவும் இன்றி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் காப்பாளர்களிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலத்தில் வருகின்ற 10.9.2022க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவிகள் விண்ணப்பிக்கும்போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ் ஏதும் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு விடுதியிலும் மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களை எக்காலத்திலும், எந்த நேரத்திலும், எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக்கொள்ளவும், அவர்களது படிப்பு முடியும் வரை விடுதிகளில் தங்கிப் பயிலவும் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, கல்லூரி மாணவிகள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்….