காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 88 வாக்குச்சவாடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு, வெப் ஸ்ரீடீரிமிங் எனப்படும் இணையவழியில் கண்காணிக்கப்பட உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51, குன்றத்தூர் நகராட்சியில் 30, மாங்காடு நகராட்சியில் 27, வாலாஜாபாத் பேரூராட்சியில் 15, உத்திரமேரூர் பேரூராட்சியில் 18 வார்டு என மொத்தம் 156 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்ய 384 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 40, குன்றத்தூர் நகராட்சியில் 17, மாங்காடு நகராட்சியில் 16, ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 5, வாலாஜாபாத் பேருராட்சியில் 4, உத்திரமேரூர் பேரூராட்சியில் 6 என 88 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளன.இந்த வாக்குச்சாவடிகள் வெப் ஸ்ரீடீரிமிங் எனப்படும் இணையவழியில் கண்காணிக்கப்பட உள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் 29 நுண்பார்வையாளர்கள் தேர்தலை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் 16 சுற்றுகளாகவும், மாங்காடு, குன்றத்தூர் நகராட்சி வாக்குகள் 6 மேஜைகளில் 9 சுற்றுகளாகவும் எண்ணப்பட உள்ளன. மேலும், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி வாக்குகள் 3 மேஜைகளில் 9 சுற்றுகளாகவும், வாலாஜாபாத் வாக்குகள் 3 மேஜைகளில் 6 சுற்றுகளாகவும் எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கேவிகே நகராட்சி நடுநிலைப்பள்ளி, கைலாசநாதர் நகராட்சி தொடக்கப்பள்ளி, நாராயண குரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்பட பல மையங்களில் கலெக்டர் ஆர்த்தி, நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளான மின்சாரம், குடிநீர், கழிப்பறை உள்பட பல்வேறு வசதிகளுக்கு, தேவையான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளதா என அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வாக்களிக்க வசதியாக, அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா எனவும் கேட்டறிந்தார். ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் நாராயணன் உள்பட பலர் இருந்தனர்….