Thursday, June 27, 2024
Home » காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பாமக உள்பட 11 வேட்பாளர்கள் போட்டி: 2 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பாமக உள்பட 11 வேட்பாளர்கள் போட்டி: 2 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர்

by Karthik Yash

காஞ்சிபுரம், மார்ச் 31: காஞ்சிபுரம் தொகுதியில் திமுக, அதிமுக, பாமக உள்பட 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று இரண்டு பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. 25ம் தேதி திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மறுநாள் 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கடைசி நாளான நேற்று முன்தினம் ஏராளமான சுயேச்சை வேட்பாளர்கள் என காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். கடைசி நாளான 27ம் தேதி கூடுதல் வேட்பு மனு, மாற்று வேட்பாளர் மனு என மட்டும் 15 சுயேச்சை வேட்பாளர்கள் என 19 வேட்புமனு தாக்கல் செய்தனர். மொத்தத்தில் 25 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் 31 வேட்புமனுக்கல் தாக்கல் செய்து இருந்தனர்.

இந்நிலையில், வேட்பு மனுக்கள் பரிசீலனை மாவட்ட கலெக்டரும் தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி மோகன் தலைமையில் நடந்தது. அதிகாரிகள் கொண்டக் குழு வேட்பு மனு பரிசீலனை செய்தனர். இதில் திமுக வேட்பாளர் க.செல்வம், அதிமுக வேட்பாளர் ராஜசேகர், பாமக சார்பில் ஜோதி வெங்கடேசன், நாம் தமிழர் சார்பில் சந்தோஷ் குமார், பிஎஸ்பி சார்பில் இளையராஜா மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ரமேஷ், இளங்கோவன், கார்த்திகேயன், சூர்யா, த.செல்வம், நரேஷ் பாரதி, மோகனசுந்தரம், வெங்கடேசன் என 13 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மீதமுள்ள வேட்பு மனுக்கள் மாற்று வேட்பாளர், மற்றும் கூடுதல் வேட்பாளர் உள்ளிட்ட 18 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

நேற்று 30ம் தேதி வேட்புமனு வாபஸ் என்பதால் இதில் சுயேச்சை வேட்பாளர்கள் மோகன சுந்தரம், கார்த்திகேயன் ஆகியே 2 பேர் வாபஸ் பெற்றுக்கொண்டனர். தற்போது நிலவரப்படி காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் 11 பேர் இறுதி வேட்பாளராக களத்தில் உள்ளனர். திமுக வேட்பாளர் க.செல்வத்திற்கு உதயசூரியன் சின்னமும், பெரும்பாக்கம் ராஜசேகருக்கு இரட்டை இலை சின்னமும், பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசனுக்கு மாம்பழம் சின்னமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்தோஷ் குமாருக்கு மைக் சின்னமும், பிஎஸ்பி வேட்பாளர் இளையராஜாக்கு யானை சின்னமும் சுயேச்சை வேட்பாளர்கள் ரமேஷ் காஸ் சிலிண்டர் சின்னமும், இளங்கோவன் தர்பூசணி பழம், சூர்யா கேமரா சின்னமும், டீ.செல்வம் மோதிரம் சின்னமும், நரேஷ் பாரதி பேட் சின்னமும், வெங்கடேசன் வைரம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெரும்புதூரில் 31 பேர் போட்டி
பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக திமுக, அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி உள்பட 53 பேர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருமான அருண்ராஜிடம் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யயப்பட்டு 21 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 32 பேரின் மனு ஏற்கப்பட்டது. நேற்று வேட்பு மனு வாபஸ் வாங்க கடைசி தேதி. இதில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் மட்டும் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, அதிமுக பிரேம்குமார், தமாகா வேணுகோபால் உள்பட நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் உள்பட 31 பேர் களத்தில் உள்ளதாக தேர்தல் அதிகாரி அருண்ராஜ் அறிவித்தார். இவர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

You may also like

Leave a Comment

two + 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi