Friday, July 5, 2024
Home » காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் மழையால் 140 ஏரிகள் நிரம்பின: வாயலூர் தடுப்பணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் மழையால் 140 ஏரிகள் நிரம்பின: வாயலூர் தடுப்பணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்

by Karthik Yash

காஞ்சிபுரம், நவ.23: தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 140 ஏரிகள் நிரம்பின. மேலும், வாயலூர் தடுப்பணை நிரம்பி, 2,170 கனஅடி உபரிநீர் வெளியேறி வருகிறது. தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அந்தவகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம், பெரும்புதூர், குன்றத்தூர், உத்திரமேரூர் வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் காஞ்சிபுரம் மாதா கோயில் தெரு, தாமல்வார் தெரு, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு, ரங்கசாமி குளம், இரட்டை மண்டபம், பெரியார் நகர், விளக்கடி பெருமாள் கோயில் தெரு மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவா கூட்டை தெரு, லிங்கப்பன் தெரு, முருகன் காலனி, பல்லவர் மேடு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்வரத்து கால்வாய்கள் மூலம் நீர்வரத்து வந்துக்கொண்டு இருப்பதால் உள்ளாவூர் மதகுஏரி, காம்மராஜபுரம் ஏரி, பழைய சீவரம் அருக்கேன்டாண் ஏரி, கரூர் தண்டலம் ஏரி, கட்டவாக்கம் ஏரி, புத்தேரி கோவிந்தவாடி சித்தேரி, பெரிய கரும்பூர் மதகு ஏரி, சக்கரவர்த்தி தாங்கள், கூரம் சித்தேரி, தாமல் கோவிந்தவாடி பெரிய ஏரி, தாமல் சக்கரவர்த்தி ஏரி, தாமல் சித்தேரி, கோவிந்தாவாடி பெரிய ஏரி, வேளியூர் பெரிய ஏரி, வெளியூர் சித்தேரி, வெங்கச்சேரி, பழைய சிவரம் உள்ளிட்ட 140 சிறிய ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

அதன்படி, ஏரியில் நிறைந்த மாவட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் பகுதியில் 381 ஏரிகள் இருக்கின்றன. இதில், மேற்கூறிய 45 ஏரிகள் 100 சதவீதமும், 29 ஏரிகள் 75 சதவீதமும், 61 ஏரிகள் 50 சதவீதமும், 175 ஏரிகள் 25 சதவீதமும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளில், 95 ஏரிகள் 100 சதவீதமும், 132 ஏரிகள் 75 சதவீதமும், 160 ஏரிகள் 50 சதவீதமும், 122 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன.
மேலும், மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்துக்கு நீர் பாசனத்திற்கு உகந்த பெரிய ஏரிகளான தாமல், பெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், தென்னேரி, மணிமங்கலம், உத்திரமேரூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய ஏரிகளான செங்கல்பட்டு – கொளவாய், தையூர், மானாமதி, கொண்டங்கி உள்ளிட்ட ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே உள்ள வாயலூர் தடுப்பணை நிரம்பி 2,170 கனஅடி உபரிநீர் வெளியேறி வருகிறது.

You may also like

Leave a Comment

20 + 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi